Wednesday, December 1, 2010

எண்ணிமுடியாத அதிசயங்கள்


ஆராய்ந்து முடியாத பெரியகாரியங்களை எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். (யோபு 5-9). நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால்,உம்மைத் துதிப்பேன்(சங்.139-14). அவரைத் துதிக்க வேறு காரணங்கள் பல இருந்தாலும் இது ஒன்றே போதும் என்பது சங்கீதக்காரனின் தெளிவான முடிவு. தேவனின் கிரியைகள் அதிசயமானவை (சங்.145-5)
என்பதற்கு நம்மில் நாமே மிகப்பெரிய சான்று.
அதனால் அவர் அருளிய வேதமும் அதிசயமானதாகவே இருக்க முடியும்.சற்று நேரம் சிந்தியுங்கள்.
நம்முடைய உடல்,அறிவு,உயிர் எத்தனை பிரமிக்கத்தக்க அதிசயமாய் இருக்கிறது? தேவனின்
அதிசயங்களுக்கு உதாரணத்தைத் தேடி அலைய வேண்டிய அவசியமே இல்லை.வானங்கள்
தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது (சங்.19-1).என்று எவ்வளவு பொருத்தமாகக்
கவிஞன் விளக்குகிறான்.



ஆகாய விரிவும், விண் மீன்களும்,அவற்றைச் சுற்றியோடும் கோள்களும் அவற்றின் கோடி கோடியான தொகையும்,வகையும் வகையும்,வண்ணமும்,வனப்பும்,வடிவங்களும்--அவர் ஆலோசனையில்
ஆச்சரியமானவர் (ஏசா.28-29) என்பதை விளக்குகின்றன. நமது அறிவுக்கு எட்டாத அற்புதங்களை அற்புதங்களை
ஆற்றுகிற தேவனின் வசனமும,வார்த்தைகளும் அடங்கிய பரிசுத்த வேதாகமத்தின் உள்ளுறைந்த அதிசயங்கள்
எண்ணி முடியாதவைகள்.


இப்படிப்பட்ட பரிசுத்தமான வேதாகமத்தை நாம் ஏதோ கடமைக்காகப் படித்து சென்று விடுகிறோம்.சில
வசனங்களை மட்டும் படிக்கிறோம்.சில அதிகாரங்களை மட்டும் படிக்கிறோம். ஒருசிலர் ஆதியாகமத்தில்
இருந்து வெளிப்படுத்தின் விசேஷம் வரை வாசித்து செல்கின்றனர். பல வசனங்களை மனப்பாடம்
செய்துகொள்வோரும் உண்டு. இவை எல்லாம் நல்ல நடைமுறைகளே. ஒருசிலரே நன்கு தியானித்து
ஆராய்ச்சி செய்வதுண்டு. இது மிக முக்கியமானதாகும்.


வேதத்தை ஆராய்ச்சி செய்யக் கூடாது என்று தவறாக வாதிடுவோரும் உண்டு. பைபிளை மட்டுமே
படிக்க வேண்டும் என்றும், வேறு நூல்களைப் படித்து ஒப்பிடக் கூடாது என்றும் கூறுவோர் உண்டு.
வேதகமத்தில் கேள்விகளே எழுப்பக் கூடாது என்றும் சிலர் உரைப்பார். கலிலேயோ என்ற விஞ்ஞானி
உலகம் உருண்டையானது என்று கூறினார். அவரை அக்கால ரோம சபை துன்புறுத்தி சிறையில்
அடைத்தது. உலகம் தட்டையானதுதான் என்று எழுதியும் வாங்கிக்கொண்டது. இக்காரணங்களினாலேயே
வேதம் விஞ்ஞானத்துக்கு எதிரானது என்ற கருத்தைப் பரப்பத் தொடங்கினர். சபை ஒரு விஞ்ஞானி
உண்மையைக் கூறியதற்காகத் துன்புறுத்தியது ஏன்? எதற்காக? பூமி தட்டையானது என்று வேதம்
எங்காவது கூறுகிறதா? பூமி உருண்டையானது என்றே வேதாகமம் விளக்குகிறது.

அவர் பூமி உருண்டையின் மேல் வீற்றிருக்கிறவர் (ஏசா- 40:22)."பூச்சக்கரம்" என்று அதனை சுற்றியோடும்
இரு தன்மைகளையும் (சூரியனை, தன்னைத்தானே) குறித்தல்லவா வேதம் விளங்குகிறது.


வேதாகமத்தைக் காப்பதாகக் கூறி, தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளவே சிலர் உண்மை கூறிய
விஞ்ஞானிகளைத் துன்புறுத்தி உள்ளனர்.


நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும் படியாகவும், அவருடைய ஆலயத்தில்
ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய
ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். (சங் -27:4).

என்றும், அவருடைய அதிசயங்களை விவரிப்பதற்காக தேவனுடைய பீடத்தைச் சுற்றி வருவதாகவும்
தாவீது எழுதுகின்றார். ஆலயத்தில் தங்கி இருந்து பீடத்தைச்சுற்றிம்வந்து ஆராய்ச்சி செய்தல்லவோ
எண்ணிமுடியாத அதிசயங்களைக் காணமுடியும்.

இஸ்ரவேல் தேசம் விடுதலை பெற்றபோது வெறும் பாழாய் கிடந்தது. உலகெங்கும் சிதறிக்கிடந்த
யுதர்கள் திரண்டு வந்து சேர்ந்தவண்ணம் இருந்தனர்.நாட்டைப் புதுப்பிக்கத் திட்டம் இட்டனர்.
ஆனால் எப்படி எங்கிருந்து ஆரம்பிப்பது. அப்போது இஸ்ரவேல் விஞ்ஞானிகள் ஓர் அரிய
காரியத்தை செய்தனர். அவர்கள் வேதத்தை முதன்முதலாக ஆராய ஆரம்பித்தனர். எங்கு என்ன
விளையும், நீர் எங்கு கிடைக்கும், கனிமத்தாதுக்கள் கிடைக்கும் எது? இப்படி வேதத்தை அலசி ,
அந்தப் புள்ளி விவரங்களைக் கொண்டு தேசத்தை நிர்மாணித்தார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்
சுதந்திரம் பெற்ற நாடுகள் அழிவை நோக்கிப் பின்னேறும் போது, இஸ்ரவேல் நாடு எல்லாவற்றிலும்
முன்னேறி புகழ்பெற்று ஓங்குகிறது.

ஒரு தேசத்துக்கே வழிகாட்டிய வேதம், நமது வாழ்க்கைக்கு வழிகாட்டுவது எவ்வளவு நிச்சயம்?
இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங் -1:2 ).

பற்றி எரியும் தீயை, கிட்ட நெருங்கி, உற்றுப்பார்த்தால் தான் மோசேக்கு அதிசயம் விளங்கிற்று.
வேதாகமத்தை நுணுகி ஆராய்ந்த அப்போஸ்தலருக்கு சுவிசேசத்தின் அற்புதம் பிடிபடலாயிற்று.


அதிசய வேதம் புத்தகத்திலிருந்து...............

No comments:

free web counter