தமிழ்நாட்டில் வளர்ந்த தமிழர் சமயங்களான சைவமும்,வைணவமும் உலகளாவிய தமிழர் சமயத்தின் தமிழகக் கிளைகளாகும்.
"தென்னா டுடைய சிவனே போற்றி!
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி!"
என்பது மணிவாசகரின்(மாணிக்கவாசகரின்) திருவாக்கு.
தென்னாட்டில் சிவன் என்ற பெயரால் வழங்கப்படும் முழு முதற் கடவுள்தென்னாட்டிற்கு மட்டும் உரியவரல்ல; அனைத்து நாடுகளுக்கும் உரியவர் என்னும் கருத்து இதனுள் அடங்கி உள்ளது.
ஆகவே,சிவன்,விஷ்னு பற்றிப் பாடியுள்ள சைவ,வைணவ பாடல்களில் உள்ள ஆழத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் உலகளாவிய மதங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
உலகளாவிய மற்ற மதங்களைப் பற்றி முழுமையாக அறியாதவர்களுக்கு சிவனைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ளல் முடியாத ஒன்றாகும்.
இந்த நோக்கில் திருமூலர் எழுதியுள்ள திருமந்திரத்திற்கும்,கிறிஸ்தவ வேத நூலாகிய பைபிளுக்கும் உள்ள தொடர்புகள் இங்கு ஆராயப் படுகின்றன,திருமந்திரம் ஆராயப்படும்போது,திருமந்திரத்தின் கருத்துத் தொடர்பான மற்ற சைவ நூல்களும் முழுமையான கருத்துத் தெளிவிற்காக அதாவது எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்படுகின்றன.
தொடர்-1
மையக்கருத்து:இறைவன் பூமியில் மனிதனாகப் பிறந்து வந்து மனிதர்களின் பாவத்தைப் போக்கினார்.
பைபிள்: எல்லாரும் பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்துபோயினர்.(ரோமர் 3:23)
இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்கு கழுவாய்
..........தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்.மனித உருவில் தோன்றி..........
கீழ்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார்
பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார்.பிள்ளைகள் மாமிசத்தையும்,இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க,அவரும் அவர்களைப் போல மாம்சத்தையும்,இரத்தத்தையும் உடையவரானார்.(எபிரேயர் 2:14)
நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரை பாவ நிலை ஏற்கச் செய்தார்.(2 கொரிந்தியர் 5:21)
விண்ணின்று இழிந்து வினைக்குஈடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளை தலைக்காவல் முன்வைத்து
உண்நின்று உருக்கிஓர் ஒப்பிலா ஆனந்தக்
கண்நின்று காட்டிக் களிம்புஅருத் தானே
-திருமந்திரம் 113.
பத உரை:
விண்ணின்று இழிந்து- பரம்பொருள் விண்ணுலகை விட்டிறங்கி,மண்ணுலகை வந்து அடைந்து.
வினைக்கு ஈடாய் மெய் கொண்டு-வினைக்கு இடமான மனித உடம்பு எடுத்து
தண்ணின்ற தாளை-குளிர்ச்சி பொருந்திய திருவடிகளை
தலைக்காவல் முன்வைத்து-ஆன்மாக்களுக்குப் பாதுகாவலனாக வைத்து,
உண்ணின்று உருக்கி-உள்ளத்துள்ளே தன் திருவருள் புகச் செய்து,
ஓர் ஒப்பிலா ஆனந்த-ஒப்புவமை கூற இயலாத பேரானந்தப் பெருவெள்ளம் பெருக்கெடுத்தோட
கண்நின்று காட்டி-கண்கள் அருள் ஓளி கண்டுகளிக்க செய்து
களிம்பு அறுத்தானே-பாச தளைகளை,பாவ வினைகளை அறுத்தெறிந்தான்.
பரம்பொருள் விண்ணுலகை விட்டு இறங்கி,மண்ணுலகை வந்து அடைந்து,மனித உடம்பு எடுத்து,ஆன்மாக்களின் உள்ளத்தில் தன்
திருவருளைப் புகச்செய்து,கண்கள் அருள் ஒளியைக் கண்டு இன்பமடையச் செய்து,பாவத்தை போக்கினான்.
இக்கருத்தையே மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் தெளிவாக விளக்குகிறார்.
அருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபரனாகி அருளிய பெருமையைச்
சிறுமை என்று இகழாதே.
-திருவாசகம்,போற்றித் திரு அகவல்.
பிரபஞ்சத்துக்கு அப்பால் உயர்ந்த இடத்தில் இருக்கின்ற பரமன், பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாகிய இந்த நில உலகில் பரமகுருவாய் வந்து
என்னை ஆண்டுகொண்டது அவனுடைய பெருமைக்கோர் எடுத்துக் காட்டன்றோ!
இறைவனின் இச்செய்கையை வெகு சாதரணமாக எண்ணிவிடக் கூடாது.
மெய்தரு வேதியனாகி வினைகெடக்
கைதரவல்ல கடவுள் போற்றி.
-போற்றித் திரு அகவல்
புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப்
பேதம் கெடுத்தருள் செய்பெருமை
அறியவல்லார் எம்பிரான் ஆவாரே
-திருவார்த்தை 7
புண்ணியனாகிய இறைவன் இம்மண்ணில் வந்து தோன்றி,பேதம் கெடுத்தான்.(இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இருந்த பிரிவினையை அகற்றினார்.)
இக்கருத்தையே
இறவா இன்பத்து எமை இருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்தான்.
போற்றிப்பஃறொடை69
என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது.
'அவதார்' என்று சமஸ்கிருதச் சொல்லிற்கு 'இறங்கி வருதல்' என்பது பொருள் .இதன் தமிழ் வடிவமே 'அவதாரம்' என்பது ஆகும்.
இறங்கி வருதல் என்று கூறினால்,
-யார் இறங்கி வந்தார்?
-எங்கிருந்து இறங்கி வந்தார்?
-எங்கு வந்தார்?
-எவ்வடிவத்தில் இறங்கி வந்தார்?
1,யார் இறங்கி வந்தார்?
பரம்பொருள்-அருபரத்தொருவன்-புண்ணியன்-கடவுள்-பிறவா முதல்வன்.
2,எங்கிருந்து இறங்கி வந்தார்?
விண்ணின்று இழிந்து-அருபரத்திலிருந்து.
3,எங்கு வந்தார்?
அவனியில் வந்தார்-மண்ணிடை வந்தார்.
4,எவ்வடிவத்தில் இறங்கி வந்தார்?
வினைக்கு ஈடாய் மெய்கொண்டு வந்தார்.குருவாக வந்தார்,பிறந்து வந்தார்.
5,ஏன் இறங்கி வந்தார்?
களிம்பு(பாவம்)அறுக்க வந்தார்.வினை கெட வந்தார்.பேதம் கெடுத்து அருள் செய்ய வந்தார்
இறவா இன்பத்து எமை இருத்த வந்தார்.
-(இன்னும் வரும்)
திராவிட சமயம் இதழ் ஏப்ரல் 2008